இணைப்புக் கல்லூரி ஆசிரியர்களின் விவரங்கள் 10 நாள்களில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு
சென்னை, பிப்.28: இணைப்புக் கல்லூரி ஆசிரியர்கள் குறித்த முழு விவரங்களும் சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தில் 10 நாள்களில் வெளியிடப்பட உள்ளன. இதன் மூலம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள 1
சென்னை, பிப்.28: இணைப்புக் கல்லூரி ஆசிரியர்கள் குறித்த முழு விவரங்களும் சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தில் 10 நாள்களில் வெளியிடப்பட உள்ளன.
இதன் மூலம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள 100-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளில் போதுமான அளவில் தகுதியான ஆசிரியர்கள் உள்ளனரா என்பதை மாணவர்களும், பெற்றோரும் தெரிந்துகொள்ள முடியும்.
பல்கலைக்கழக கல்விப் பணியாளர் (அகாடமிக் பணியாளர்) துறை இணையதளத்தில் இந்த விவரங்கள் வெளியிடப்பட உள்ளன. ஒவ்வொரு இணைப்புக் கல்லூரியிலும் எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர், அவர்களுடைய கல்வித் தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அவர்களுடைய புகைப்படத்துடன் இடம் பெற்றிருக்கும்.
Advertisement
இந்த விவரங்களை இணையதளத்தில் இணைக்கும் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. இன்னும் 10 தினங்களில் விவரங்கள் வெளியிடப்பட்டுவிடும். இதன் மூலம் மாணவர்களும், பெற்றோரும் பயன்பெறுவதோடு, கல்லூரிகளும் குறைந்த ஆசிரியர்களை வைத்துக்கொண்டு பல்வேறு துறைகளுக்கு கணக்குக் காட்டுவது உள்ளிட்ட முறைகேடுகள் தடுக்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. திருவாசகம் கூறினார்.
கல்லூரிகளில் ஆய்வு செய்ய புதிய திட்டம்: மேலும் இணைப்புக் கல்லூரிகள் புதிய படிப்புகளுக்கு அனுமதி கேட்கும்போது, பல்கலைக்கழகக் குழுவினால் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு, புதிய படிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.
இந்த ஆய்வின்போது புதிய படிப்புகளுக்குத் தேவையான புதிய ஆசிரியர்களை உடனடியாக நியமிப்பதாகவும், புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்வதாக வாக்குறுதி தரும் கல்லூரிகள், பின்னர் அவற்றை நிறைவேற்றுவதில்லை.
எனவே முதல் பருவத் தேர்வு முடிந்த பின்னர், மீண்டும் ஒருமுறை பல்கலைக்கழகக் குழு சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு போதுமான ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்யும்.
இதில் முறைகேடு எதுவும் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட படிப்புக்கு அனுமதி ரத்து செய்யப்படும்' என்றார் அவர்.
80 சதவீத கல்லூரிகளில் முதல்வர் நியமனம்: பல்கலைக்கழகம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் மற்றும் உத்தரவுகள் காரணமாக இப்போது பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள 80 சதவீத கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் பூர்த்தியாகியுள்ளது. இதுபோல் ஆசிரியர் கல்வித் தகுதிக்கான பல்கலைக்கழக அனுமதியையும் பெற்றுள்ளன.
20 சதவீத கல்லூரிகள் மட்டுமே இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை. ஒரு சில பாடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாததே இதற்குக் காரணம்.
எனவே அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த 20 சதவீத கல்லூரிகளிலும் தகுதியான ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டுவிடும்' என்றார் திருவாசகம்.