டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
அமெரிக்க அதிபர் டிரம்ப், மெலானியா டிரம்ப், ஜே.டி. வான்ஸ் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி-யில் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அதிபர் டிரம்ப் இரவு விருந்து அளித்தார். இந்த இரவு விருந்தில் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ள்பட சுமார் 2,600 பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இரவு விருந்தில் அடையாளம் தெரியாத ஒருவர், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். விருந்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டவுடன், அங்கிருந்தோர் அனைவரும் தரையில் கீழே படுக்குமாறு எச்சரிக்கப்பட்டனர்.
Advertisement
இதனைத் தொடர்ந்து, டிரம்ப்பும் மெலானியா டிரம்ப்பும் மேடைக்குப் பின்னால் பாதுகாப்பாக ஒளிந்துகொண்ட நிலையில், பலரும் மேசைகளுக்கு அடியில் பாதுகாப்பாக தற்காத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, விருந்தில் பங்கேற்ற அனைவரையும் பாதுகாப்புப் படையினர் பத்திரமாக வெளியேற்றினர். இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரையும் கைது செய்தனர். இந்த விருந்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோதிலும், விருந்தினைத் தொடரலாம் என்றே டிரம்ப் கூறியுள்ளார். இருப்பினும், பாதுகாப்பு அதிகாரிகளின் வலியுறுத்தலின்பேரில், விருந்தை பின்னர் மீண்டும் நடத்தவுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, சம்பவத்தின்போது பாதுகாப்பு அதிகாரிகளின் துரிதமான மற்றும் துணிகரமிக்க செயலையும் டிரம்ப் பாராட்டினார்.