சாலையில் சிதறும் கந்தகம்: கண்ணீர் சிந்தும் வாகன ஓட்டிகள்
துறைமுக இணைப்புச் சாலைகளில் சிதறும் கந்தகத் துகள்களால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அடிக்கடி நிகழும் இந்நிகழ்வுகள் குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னைசாலையில் சிதறும் கந்தகம்: கண்ணீர் சிந்தும் வாகன ஓட்டிகள்
துறைமுக இணைப்புச் சாலைகளில் சிதறும் கந்தகத் துகள்களால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அடிக்கடி நிகழும் இந்நிகழ்வுகள் குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
துறைமுக இணைப்புச் சாலைகளில் சிதறும் கந்தகத் துகள்களால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அடிக்கடி நிகழும் இந்நிகழ்வுகள் குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பல்வேறு வகை உரங்கள் தயாரிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கந்தகம் சென்னைத் துறைமுகத்திற்கு கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்டு பின்னர் லாரிகள் மூலம் திருவொற்றியூர், மணலி பகுதிகளில் உள்ள சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
கந்தகம் ஏற்றிவரும் கப்பல்கள் துறைமுகத்துக்கு வரும் நேரங்களில் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் எண்ணூர் விரைவு நெடுஞ்சாலை, மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, உள்வட்டச் சாலை, பொன்னேரி சாலை உள்ளிட்டவைகள் வழியே செல்லுகின்றன. கந்தகத் துகள்கள் சாலைகளில் சிந்தினால் அதிலிருந்து வெளிப்படும் தூசு வாகன ஓட்டிகளின் கண்களை பாதிக்கும். மேலும் உடம்பில் பட்டு தோள்களில் அரிப்பு ஏற்படும் என்பதாலை இதனை சாலைகளில் எடுத்துச் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் கடந்த சில நாள்களாக இவ்வாகனங்கள் செல்லும் சாலைகளில் பெரும்பாலான இடங்களில் கந்தகத் துகள்கள் சிதறியுள்ளன. சாலைகள் கருப்பாகக் காணப்படுவதற்குப் பதிலாக மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கின்றன.
கண்ணீர் சிந்திய வாகன ஓட்டிகள்: எண்ணூர் விரைவு சாலையில் செவ்வாய்க்கிழமை சென்ற வாகன ஓட்டிகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். முதலில் சற்று நேரம் ஏதும் அறியாத நிலையில் பின்னர் படிப்படியாக கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு பலருக்கும் கண்ணீர் வந்தது. இதனையடுத்து வாகனங்களை நிறுத்திவிட்டு முகத்தை தண்ணீரால் கழுவி கந்தகத்தின் வேகத்தைத் தணித்தனர். ஆனால் சாலை நெடுகிலும் கந்தகம் சிதறி இருந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் சாலைகளைப் பெருக்கி சுத்தம் செய்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.
ஆய்வு, நடவடிக்கை வேண்டும்:
இது குறித்து சென்னை மாநகராட்சி 6-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வின்சென்ட் அமல்ராஜ் கூறியது,
திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மணலி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கிடங்குகள் உள்ளன. இதில் பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளன. இதில் ஒன்றுதான் கந்தகம். மக்கள் வசிக்கும் இடங்களில் சேமித்து வைக்கக் கூடாது. ஆனால் திருவொற்றியூர் ஜோதி நகர் அருகே மலை போல் குவித்து வைத்துள்ளனர். இதிலிருந்து வெளியாகும் நெடி, துகள்களால் இப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதேபோல் சாலைகளில் சிதறும் கந்தகமும் கூடுதல் அவதியை ஏற்படுத்துகிறது. எனவே இது குறித்து மாநகராட்சி, சுற்றுச் சூழல் உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய வேண்டும். இதனை மக்கள் வசிக்கும் இடங்களில் சேமித்து வைக்க
அனுமதிக்கக் கூடாது. மேலும் கந்தகம் ஏற்றி வரும் வாகனங்கள் சாலைகளில் செல்லும் போது பாதுகாப்பு விதிகளை செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
காற்று மாசு, தொழிற்சாலை மாசு, ரசாயன மாசு போன்றவைகளால் ஏற்கனவே மூச்சுத் திணறும் வடசென்னையை கந்தகத் துகள் சிதறல்கள் மேலும் பாதிப்படைய வைக்கின்றன. எனவே இதில் அரசு அதிகாரிகள் உடனடியாக உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே எதார்த்த உண்மையாகும்.