முகப்பு
சென்னை

வெங்காயத்தின் விலை 2 மடங்கு உயர்வு: பதுக்கலே காரணம் என குற்றச்சாட்டு

கடந்த ஆண்டைவிட வெங்காயத்தின் விலை தற்போது 2 மடங்கு அதிகரித்துள்ளது.பதுக்கல் காரணமாகவே வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே பதுக்கலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 22 செப்டம்பர், 2013 at 4:23 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:22 PM

கடந்த ஆண்டைவிட வெங்காயத்தின் விலை தற்போது 2 மடங்கு அதிகரித்துள்ளது.பதுக்கல் காரணமாகவே வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே பதுக்கலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் வெங்காயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.20-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்து தற்போது ரூ.55 முதல் 60 வரை விற்கப்படுகிறது.

ஒரு குவிண்டால் (100 கிலோ) வெங்காயத்தை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஆனால் மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ.4,000 முதல் 5,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. மார்க்கெட்டுக்கு லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் ஒரு மூட்டை வெங்காயத்தில் சராசரியாக 50 முதல் 55 கிலோ வரை உள்ளது. 5 சதவீதம் வரை சருகு மற்றும் சேதமடைவதாகவும் தொடர்ந்து வரத்து குறைவாக உள்ளதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சனிக்கிழமை வரை வெங்காயத்தின் விலை சிறிதும் குறையவில்லை.

Advertisement

வெங்காயத்தின் உற்பத்தி மற்றும் விலை உயர்வு குறித்து வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறியது:

இருப்பு வைத்து விற்பனை: குளிர் பதனக் கிடங்கு மூலம் வெங்காயத்தை அதிகபட்சம் 6 மாதம் வரை அழுகாமல் வைத்திருக்க முடியும். வெங்காயம் பயிரிட்ட இடங்களில் நாங்கள் கள ஆய்வுக்கு சென்றபோது, "மொத்த வியாபாரிகள் எங்களிடம் அதிகளவு வெங்காயத்தை கொள்முதல் செய்து குளிர்பதன கிடங்குகளில் இருப்பு வைத்து விடுகிறார்கள். இதனால் விலை அதிகரித்தும் உற்பத்தியாளர்களாகிய எங்களுக்கு எந்த பயனும் இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர். உணவில் அத்தியாவசியமாகிவிட்ட வெங்காயத்தின் விலை கடந்த 5 மாதங்களில் தொடர்ந்து ஏறுமுகமாகவே காணப்படுகிறது' என்றார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாழக்கிழமை முதல் தரம் கொண்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.55 முதல் 65 விற்பனையானது. புதியவை என்று வியாபாரிகளால் கூறப்படும் இரண்டாம் தர வெங்காயம் ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது.

இது குறித்து மொத்த வியாபாரி நாகலிங்கம் கூறியது:-

வரத்து குறைவு: வரத்து குறைந்துள்ளதால் மட்டுமே வெங்காயம் விலை உயர்ந்துள்ளதே தவிர பதுக்கி வைத்து விற்பனை செய்கிறோம் என்பதை எற்றுக்கொள்ள முடியாது. பருவமழை அதிகரித்து புனே, நாசிக் பகுதிகளில் உற்பத்தி அதிகரித்தால் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.

வியாபாரிகள் தரப்பில் இவ்வாறு கூறினாலும், வரத்து குறைந்து போனதற்கு பதுக்கலே காரணம் என்று கூறப்படுகிறது.

தற்போதுள்ள நிலை நீடித்தால் அன்றாட தேவைகளுக்கு வெங்காயத்தையே பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். அதனால் விவசாயிகளிடம் இருந்து வெங்காயத்தை நேரடியாக அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு குறைந்த அளவில் விற்பனை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.