டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
டிம் டேவிட் மற்றும் ஹார்திக் பாண்டியாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது குறித்து...
டிம் டேவிட் மற்றும் ஹார்திக் பாண்டியாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் திங்கள்கிழமை (ஏப்.13) அபராதம் விதித்துள்ளது.
போட்டி நடத்தை விதிகளை மீறியதாக டிம் டேவிட்டுக்கும், ஓவர்களை சரியான நேரத்துக்குள் முடிக்காமல் தாமதப்படுத்தியதாக ஹார்திக் பாண்டியாவுக்கும் ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.
Advertisement
டிம் டேவிட்டுக்கு அபராதம் விதித்த காரணம்
ஆர்சிபி பேட்டிங்கின்போது, இன்னிங்ஸின் 18வது ஓவரில் நடுவர்கள் பந்தைப் பார்க்க விரும்பினர். நடுவர் பலமுறை பந்தைக் கேட்டபோதிலும் டிம் டேவிட் அதை ஒப்படைக்கவில்லை.
எனவே, இந்தப் போட்டியின்போது நடுவரின் அறிவுறுத்தலை மீறியதற்காக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆல்-ரவுண்டர் டிம் டேவிட்டுக்கு அவரது போட்டி ஊதியத்தில் 25 சதவிகிதம் அபராதமும், ஒரு தகுதிக்குறைப்புப் புள்ளியும் (Demerit point) விதிக்கப்பட்டது என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது.
ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த காரணம்
உண்மையில், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த சூழ்நிலை காரணமாக இந்தப் போட்டியில் இரு அணிகளின் வீரர்களும் பலமுறை ஆட்டத்தை இடைநிறுத்தினர். முதல் இன்னிங்ஸ் இரண்டு மணி நேரம் ஒரு நிமிடத்தில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ் இரண்டு மணி நேரம் நான்கு நிமிடங்களில் நிறைவடைந்தது.
ஆகையால், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓவர்களை சரியான நேரத்துக்குள் முடிக்காமல் தாமதப்படுத்தியதாக ரூ.12 லட்சம் அபராதம் விதித்ததாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.