முகப்பு
சென்னை

42 வயதில் பி.இ. சேர ஆர்வம் காட்டும் விவசாயி மகன்

தனது அரிய கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் பெறுவதற்காக 42 வயதில் பொறியியல் படிப்பில் சேரப் போகிறார் பெரம்பலூரைச் சேர்ந்த விவசாயியின் மகன்.

Updated On : 11 ஜூலை, 2016 at 2:00 AM
பகிர்:

தனது அரிய கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் பெறுவதற்காக 42 வயதில் பொறியியல் படிப்பில் சேரப் போகிறார் பெரம்பலூரைச் சேர்ந்த விவசாயியின் மகன்.

2016-17 கல்வியாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள இவர், பி.இ. தமிழ் வழி இயந்திரவியல் பிரிவைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் பள்ளகாளிங்கராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. 25-6-1974 அன்று பிறந்துள்ளார்.

Advertisement

1991-இல் பிளஸ்-2 முடித்த இவர், அதன் பிறகு இரண்டு ஆண்டு ஐடிஐ (ஆட்டோமொபைல்) சேர்ந்து படித்துள்ளார். ஐடிஐ சேர்ந்தது முதலே, ஆட்டோமொபைல் துறையில் ஏதாவது புதிதாக சாதிக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியமாக இருந்துள்ளது. ஆனால், குடும்பச் சூழல், அதற்கு இடம்கொடுக்கவில்லை என அவர் கூறுகிறார்.

ஐடிஐ முடித்து திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், ஆய்வக உதவியாளராகப் பணியில் சேர்ந்த அண்ணாதுரை, அதன் பிறகு தனது எண்ணத்தில் உதித்தத் திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியுள்ளார். ஊதியத்தில் ஒரு பகுதியை அதற்காக செலவழித்துள்ளார்.

எந்தவொரு வாகனமும் விபத்தில் சிக்காத வகையிலான கருவியைக் கண்டுபிடிப்பதுதான் அவருடைய லட்சியம்.

இப்போது, அந்த கண்டுபிடிப்பின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள அவர், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, பொறியியல் படிப்பிலும் சேர முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாதுரை கூறியது:

கார், பைக் உள்ளிட்ட அனைத்து ரக வாகனங்களும் விபத்தில் சிக்காத வகையிலான கருவியை உருவாக்குவதுதான் எனது திட்டம். காந்தப் புலத்தின் நேர் துருவங்கள் ஒன்றோடு ஒன்று ஓட்டாது என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கருவியை வடிவமைத்திருக்கிறேன்.

இந்தக் கருவியை வாகனத்தில் பொருத்திவிட்டால், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று விபத்தில் சிக்குவதைத் தடுத்துவிட முடியும்.

இந்தக் கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, அண்ணா பல்கலைக்கழக துறைகளில் ஒன்றான சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி.-யில் கடந்த பிப்ரவரி 26,27 தேதிகளில் நடைபெற்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கமான "ஆட்டோமீட்-2016' நிகழ்ச்சியில் எனது ஆராய்ச்சி திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்தேன்.

ஆனால், உரிய கல்வித் தகுதி இல்லையெனக் கூறி, எனது திட்ட அறிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.

இதனால், இப்போது பொறியியல் பட்டப் படிப்பை ( தமிழ் வழி பி.இ. இயந்திரவியல்) மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டே படிக்கத் திட்டமிட்டுள்ளேன்.

பி.இ. சேர்ந்த உடன், எம்.ஐ.டி.-யில் 2017-இல் நடத்தப்பட உள்ள "ஆட்டோமீட்-2017' கருத்தரங்கில் மீண்டும் எனது ஆராய்ச்சி திட்ட அறிக்கையைச் சமர்ப்பிப்பேன் என்றார் அண்ணாதுரை.

பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 699 மதிப்பெண் பெற்றுள்ள இவருடைய பி.இ. கட்-ஆஃப் 104 ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.