சண்டைப் பயிற்சியாளர்களுக்கும் தேசிய விருது அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் ஐஸ்வர்யா தனுஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சண்டைப் பயிற்சியாளர்கள் குறித்து "சினிமா வீரன்' எனும் ஆவணப் படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ளார். இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் வர்ணனையைத் (வாய்ஸ் ஓவர்) தரவுள்ளார்.
இந்தப் படத்தை "சண்டை பயிற்சியாளர்கள் புகழப்படாத நிஜ நாயகர்கள். அவர்களுக்கு இந்தப் படம் அர்ப்பணிப்பு" என்று ஐஸ்வர்யா தனுஷ் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், சென்னைக்கு அண்மையில் வந்திருந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்து, "சண்டைப் பயிற்சியாளர்களையும் தேசிய விருது பட்டியலில் சேர்க்க வேண்டும்' என்ற கோரிக்கை மனுவை ஐஸ்வர்யா தனுஷ் அளித்தார்.
மேலும், ஆவணப் படத்தின் சில காட்சியமைப்புகளையும் அவர் காட்டியுள்ளார். இதுகுறித்து நடிகர் தனுஷ் டிவிட்டரில், "நல்ல முயற்சி. கண்டிப்பாக இது நடைபெறும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், திரையுலத்தினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.