பாண்டிச்சேரி கடல்சார் பயிற்சி நிறுவனத்தின் சென்னை வளாகத்தின் அங்கீகாரத்தை உடனடியாக திரும்பப் பெற்றுள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் மும்பையில் செயல்படும் கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநர் அலுவலகம், பாண்டிச்சேரி கடல்சார் நிறுவனம் என்ற கடல்சார் பயிற்சி நிறுவனத்தின் சென்னை வளாகத்தின் அங்கீகாரத்தை உடனடியாக திரும்பப் பெற்றுள்ளது என்பது பொதுமக்கள் தகவலுக்காக அறிவிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் 261/127, ரோகித் டவர், அங்கப்பன் நாயக்கன் தெரு, பாரிமுனை, சென்னை -600001 என்ற முகவரியில் செயல்படுகிறது.
மேலும் கீழே குறிப்பிடப்பிட்டுள்ள இந்த நிறுவனத்தின் பாட வகுப்புகளுக்கான ஆணை எண். விஐஜி- 11(2)/2015- பகுதி / 917 என்ற 06-12-17 தேதியிட்ட அங்கீகாரம் நிரந்தரமாக விலக்கிக் கொள்ளப்படுகிறது. மாலுமிகளுக்கான பாதுகாப்பு கடமை உள்ளிட்ட பாதுகாப்பு பயிற்சி, முதன்மை ஊழியர் கட்டம் - ஐ, முதன்மை ஊழியர் கட்டம் - ஐஐ, உயர் மின்னழுத்தம் மற்றும் சுவிட்ச் கருவிகள் படிப்பு, கப்பல் நிர்வாக உயர்நிலைப் படிப்பு, மாஸ்டர்கள் மற்றும் தள அதிகாரிகள் மீள் பயிற்சி மற்றும் நிலை மேம்பாட்டு படிப்பு போன்றவற்றுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது.
எனவே பாண்டிச்சேரி கடல்சார் நிறுவனத்தின் சென்னை வளாகத்தில் மாணவர்கள் எவ்விதமான பாட வகுப்புகளிலும் சேர வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். இந்த வகுப்புகள் அனைத்தும் செல்லுபடியாகாதவை என
செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.