முகப்பு
சென்னை

இறந்து கரை ஒதுங்கும் உயிரினங்கள்

சென்னை எண்ணூரில் கப்பல்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் திருவான்மியூர் வரை கடல் நீர் மாசடைந்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:52 AM
எண்ணூரில் கப்பல்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தின் விளைவாக ஏற்பட்ட எண்ணெய் கசிவால் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகளை மொய்க்கும் காகங்கள்.
பகிர்:

சென்னை எண்ணூரில் கப்பல்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் திருவான்மியூர் வரை கடல் நீர் மாசடைந்துள்ளது. இந்த மாசின் காரணமாக இன்னும் நான்கு நாள்களில் சென்னை கடற்கரையில் மீன்கள் மற்றும் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து அண்மையில் எரிவாயு ஏற்றி கொண்டு புறப்பட்ட கப்பல், எதிரில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது மோதியது. இந்த விபத்தில் இரண்டு கப்பல்களும் பலத்த சேதம் அடைந்தன. அத்துடன், எதிரில் வந்த கப்பலில் இருந்த பல ஆயிரம் டன் கச்சா எண்ணெய், சுமார் 50 மீட்டர் தூரம் வரை படுவேகமாக பரவி கடலில் கலந்தது. கடலில் கலந்த எண்ணெய் படிப்படியாக நாலாபுறமும் நீரில் பரவியது. அந்தக் கப்பலில் சுமார் 33 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இருந்துள்ளது.
இதனால், கப்பல் விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து சுமார் 20 கடல் மைல் தொலைவு வரை எங்கு பார்த்தாலும், கடலில் கருப்பு நிறத்தில் எண்ணெய் படலமாக காட்சி அளிக்கிறது. இதனால் எண்ணூர், திருவொற்றியூர், சென்னை, பட்டினப்பாக்கம், திருவான்மியூர் வரை கடல் மாசு ஏற்பட்டுள்ளது.
மீன்கள் இறக்க வாய்ப்பு: மீன்களைப் பொருத்தவரை, தண்ணீரில் எளிதில் நீந்தி செல்லும் தன்மை கொண்டவை. நீரில் எண்ணெய் படியும்போது அதில் ரசாயனம் படலமாக உருவாகி தண்ணீரின் அடர்த்தியை அதிகரிக்கும். இதுபோன்ற நிலையில், நீரில் காற்று புகமுடியாத சூழ்நிலை உருவாகி மீன்கள் சுவாசிக்க சிரமப்படும். எண்ணெய் படலத்தினால் ஏற்பட்ட அடர்த்தியால் மீன்கள் நீந்தி செல்லவும் சிரமப்படும். இந்த காரணத்தால் தான் மீன்கள் செத்து மிதக்கின்றன.
ஆமைகளும்...:இதன் காரணமாகவே, ஆமைகளும் சுவாசிக்க முடியாமலும் நீந்த முடியாமலும் உயிரிழக்கின்றன.
ஆலிவ் ரிட்லி ஆமைகள் 30 நிமிஷத்துக்கு ஒருமுறை கடலின் மேற்பரப்புக்கு வந்து சுவாசிக்கும் தன்மை கொண்டது. இப்போது இவ்வகை ஆமைகள் முட்டையிடும் பருவம் என்பதால் அதிகமாக கடலோரங்களுக்கு வரும். தற்போது ஏற்பட்டுள்ள கடல் மாசால் அவை சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றன.
இப்போதுவரை திருவொற்றியூர் பகுதியில் நான்கு ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. எண்ணெய் எல்லாம் வடிந்து நான்கு நாட்களுக்கு பிறகே மீன்களும் ஆமைகளும் கரை ஒதுங்கும். அப்போதுதான் இந்த மாசின் பாதிப்பும், அதன் விளைவாக எவ்வளவு மீன்கள், ஆமைகள் இறந்துள்ளன என்பதும் தெரிய வரும் என்கின்றனர் சூழலியலாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments