முகப்பு
சென்னை

சென்னையில் 11,120 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் கடலுக்குள் அனுப்பப்பட்டன

சென்னை கடற்கரையில் இருந்து இந்தாண்டு 11,120 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் பாதுகாப்பாக கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

சென்னை கடற்கரையில் இருந்து இந்தாண்டு 11,120 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் பாதுகாப்பாக கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கடற்கரையில் இந்தாண்டு 15,269 ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆமைகள் பெசன்ட் நகர் மற்றும் கோவளத்தில் உள்ள 3 கூடுகளில் பாதுகாக்கப்பட்டு வந்தன.
ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் தமிழகக் கடலோரப் பகுதிக்கு வந்து முட்டையிடுகின்றன. இவற்றைப் பாதுகாத்து சேகரிக்கும் பணியில் வனத் துறையும், சில தன்னார்வலர்களும் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையைப் பொருத்தவரை விஜிபி, திருவான்மியூர், பெசன்ட்நகர் உள்ளிட்ட இடங்களில் வனத் துறை சார்பில் ஆமைக் குஞ்சு பொரிக்கும் மையங்கள் அமைக்கப்படும்.
கடலோரங்களில் இருந்து சேகரிக்கப்படும் ஆமை முட்டைகள் இங்கு பாதுகாக்கப்படும். அவை இயற்கையான முறையில் 45 நாள்களுக்கு பிறகு முட்டையில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளியேறும்.
நாய், நரி போன்ற விலங்குகளாலும், சமூக விரோதிகளாலும் முட்டைகள் சேதமாக்கப்படுவதைக் கவனத்தில் கொண்டு, வனத் துறை முட்டைகளைப் பாதுகாத்து குஞ்சுகளைப் பொரிக்கச் செய்கிறது.
பழமையான உயிரினம்: கடல்வாழ் உயிரினங்கள் அனைத்துமே இப்போது அழிவின் விளிம்பில்தான் இருக்கின்றன. அதில் இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகள் சுமார் 120 மில்லியன் ஆண்டுகளாக இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றன. இந்த ஆமைகள் எந்த இடத்தில் பிறக்கின்றனவோ, அங்கேதான் முட்டைகளை இடும்.
இந்தியாவைப் பொருத்தவரை தமிழகம் மற்றும் ஓடிசா மாநிலக் கரையோரங்களில் அதிகளவில் முட்டையிட்டு வருகின்றன. நமது கடற்கரைகளில் இவை முட்டையிட்டு வருகின்றன. ஆலிவ் ரிட்லி ஆமைகள் மீனவர்களின் நண்பனாகப் பார்க்கப்படுகின்றன. இவை அழிந்தால் நிச்சயம் மீனவர்களுக்கே இழப்புதான். இவைதான் கடலில் இருக்கும் சொறி மீன்களை உண்ணும். எனவே இவை இருந்தால், கடலின் ஆரோக்கியமான சூழல் கெடாமல் இருக்கும்.
ஆலிவ் ரிட்லி ஆமைகள் அக்டோபர் - நவம்பர் மாதங்களில்தான் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். அப்போதுதான் அதிகமாக இவ்வகை ஆமைகள் இறந்து கரை ஒதுங்கும். இதற்கு காரணம் இழுவை மீன்பிடி கப்பல்களின் வலைகளில் இவை சிக்குவதுதான். ஒவ்வொரு ஆமையும் சுமார் 30 நிமிஷங்களுக்கு ஒருமுறை, சுவாசிப்பதற்காக கடலின் மேற்பரப்பிற்கு வரும். அப்படி வந்து சுவாசிக்க முடியாத சமயங்களில்தான் அவை உயிரிழக்கின்றன என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments