சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.22.5 லட்சம் வெளிநாட்டுப் பணம் சிக்கியது. இது குறித்து 8 பேரிடம் விசாரணை நடந்து
வருகிறது.
சென்னை விமான நிலையத்திருந்து செல்லும் பயணிகள், வெளிநாடுகளுக்கு பணம் கடத்திச் செல்வதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து பன்னாட்டு விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை செல்ல சென்னை முகமது அசாருதீன், சாதிக் உள்பட 8 பேர் குழுவாக வந்தனர்.
அவர்கள் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் 8 பேரையும் தனித் தனியாக அழைத்து விசாரித்தனர்.
அவர்கள் வைத்திருந்த பெட்டியைச் சோதனை செய்தபோது கட்டு கட்டாக அமெரிக்க டாலர், யூரோ உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ.22.5 லட்சம். அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
தங்கம் கடத்தியவரிடம் விசாரணை: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் விமானத்தில் சென்னை பழனிகுமாரிடம் சோதனை செய்ததில் கால் கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.