முகப்பு
சென்னை

பேராசிரியர் பணி: பார்வைத் திறன் குறைபாடு உள்ளவருக்கு வாய்ப்பு மறுப்பு

முழு தகுதி இருந்தபோதும், வயதைக் காரணம் காட்டி பார்வையற்ற மாணவருக்கு பேராசிரியர் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Updated On : 10 செப்டம்பர், 2017 at 4:42 AM
பகிர்:

முழு தகுதி இருந்தபோதும், வயதைக் காரணம் காட்டி பார்வையற்ற மாணவருக்கு பேராசிரியர் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் சையது அகமது கபீர் (45). பார்வைத்திறன்குறைபாடுஉடைய மாற்றுத்திறனாளி. மேலாண்மைத் துறையில் முதுநிலை பட்டப் படிப்பு, எம்.ஃபில். படிப்புகளை முடித்துள்ள இவர், பேராசிரியர் தகுதிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்) இரண்டு தேர்வுகளிலும் தகுதி பெற்றுள்ளார்.
இவருக்கு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் வணிக நிர்வாகத் துறைக்கு உதவிப் பேராசிரியர் பணிக்காக, மதுரை அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்லூரியில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற்றுள்ளது. நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்தபோதும், இவருக்கு அந்தப் பணி வாய்ப்பு வழங்கப்படாமல் மற்றொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்ற 4 நபர்களில், இவர் ஒருவருக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆணையரிடம் புகார் மனு அளித்த கபூர் கூறியதாவது:
நேர்முகத் தேர்வில் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்த என்னிடம், உங்களுக்கு இப்போது 45 வயது ஆகிறது. அதன்படி, இன்னும் 9 ஆண்டுகள் தான் பணிபுரிய முடியும். எனவே உங்களுக்கு இந்தப் பணிவாய்ப்பு அளிப்பது கடினம் எனத் தெரிவித்து எனக்கு வாய்ப்புக் கொடுக்க மறுத்துவிட்டனர்.
அரசு விதிகளின்படி, தகுதியுள்ள ஒரு நபர் 48 வயது வரை உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களில், நான் மட்டுமே நெட், செட் இரு தகுதித் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தேன். மேலும், எனக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனவே, கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டு பணி வாய்ப்பை மறுத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, எனக்கு அந்தப் பணி வாய்ப்பைப் பெற்றுத்தர வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.