கஸ்தூர்பா காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொசு ஒழிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.
மத்திய அரசின் தேசிய தூய்மை பிரசாரத்தின் கீழ் 'தூய்மையே சேவை' என்ற இயக்கம், செப். 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மற்றும் கஸ்தூர்பா காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவை இணைந்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மருத்துவமனை வளாகத்தில், பொது சுகாதாரத் துறை சார்பில் கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம், சுத்தமான குடிநீர் பயன்படுத்தினால் காய்ச்சல் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் போன்ற விழிப்புணர்வு தகவல்கள் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டன.
மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.