பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 1,192 பெண்களுக்கு ரூ. 4.95 கோடி மதிப்பில் தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகையை மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் திங்கள்கிழமை வழங்கினார்.
தமிழக அரசின் சமூக நலத் துறை சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்களின் திருமணத்துக்கான உதவித் தொகை, தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா சென்னை தி.நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. சமூக நலம், சத்துணவுத் திட்ட அமைச்சர் டாக்டர் வி.சரோஜா தலைமை வகித்தார்.
இதில், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், 1,192 பெண்களுக்கு 9,536 கிராம் தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை உள்பட ரூ. 4.95 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:
ஏழை பெண்களின் நிலையைக் கருத்தில் கொண்டு திருமண உதவி, தாலிக்குத் தங்கம் ஆகிய திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அரசு தொடர்ந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. சென்னை மாநகர் பகுதியில் மட்டும் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூ.10 கோடி மதிப்பில் திருமண உதவித் தொகை, தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்றார் ஜெயக்குமார்.
மக்களவை உறுப்பினர்கள் டாக்டர் ஜெ.ஜெயவர்தன், எஸ்.ஆர்.விஜயகுமார், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆர்.நட்ராஜ், விருகை வி.என்.ரவி, பி.சத்யநாராயணன், சமூகநலம், சத்துணவு திட்டத் துறை முதன்மைச் செயலர் கே.மணிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.