முகப்பு
சென்னை

தம்பதி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு: பிகார் இளைஞர் கைது

சென்னை அருகே கொட்டிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பிகார் இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On : 19 ஏப்ரல் 2018, 4:22 am IST
பகிர்:

சென்னை அருகே கொட்டிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பிகார் இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
கொட்டிவாக்கம், ராஜீவ் காந்தி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் அ.மாயாண்டி (65). இவரது மனைவி வள்ளிநாயகி (55). இவர்களுக்கு சொந்தமான நான்கு தளத்துடன்கூடிய அடுக்குமாடி குடியிருப்பின் 3 மற்றும் 4 -ஆவது தளத்தில் இத்தம்பதி வசித்து வந்தனர். முதல் இரண்டு தளங்களும் பெண்கள் தங்கும் விடுதியாக வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
மாயாண்டியின் மூத்த மகன் அருண்குமார் பெங்களூருவிலும், இரண்டாவது மகன் கிரிஷ்குமார் சென்னை மேடவாக்கத்திலும், மகள் சுமதி அமெரிக்காவிலும் வசிக்கின்றனர்.
இளைஞர் கைது: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாயாண்டி தரைத்தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்திலும், வள்ளிநாயகி மூன்றாவது தளத்திலும் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுகுறித்து துரைப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
அதில், மாயாண்டி வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்த பிகார் மாநிலம், டெர்பங்கா மாவட்டம், ரத்தன்பூரைச் சேர்ந்த கம்ருல் ஆலம் (33) என்பவர் தம்பதியை கொலை செய்தது தெரியவந்தது.
பணத் தகராறு: இதையடுத்து போலீஸார், ஆலமை புதன்கிழமை கைது செய்து, அவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
மாயாண்டி வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலையை சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் ஆலம் செய்துள்ளார். மாயாண்டி ரூ.28 ஆயிரத்தை வழங்காமல் பாக்கி வைத்துள்ளார். இந்த பணம் ஆலத்துக்கு உரிய நேரத்தில் கிடைக்காததால், கர்ப்பமடைந்திருந்த அவரது மனைவிக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியவில்லையாம். இதனால் ஆலம் மனைவி கருக்கலைந்து, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அதையடுத்து விரக்தி அடைந்திருந்த ஆலம், அப்பணத்தைக் கேட்டு பல முறை மாயாண்டி வீட்டுக்கு சென்றபோது, அவர் இழுத்தடித்து வந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நண்பகலில் மீண்டும் ஆலம், மாயாண்டி வீட்டுக்குச் சென்று பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆலம், அங்கு கிடந்த உருட்டுக்கட்டையால் மாயாண்டியை தாக்கி கொலை செய்துள்ளார். 
பின்னர் மூன்றாவது தளத்துக்குச் சென்ற அவர், அங்கிருந்த வள்ளிநாயகியையும் அதே உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். அப்போது வள்ளிநாயகி அணிந்திருந்த தங்கச் சங்கிலி, வீட்டில் இருந்த ரூ.12 ஆயிரத்தையும் எடுத்துக் கொண்டு அம்பத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்த வழக்கில் மாயாண்டி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் போலீஸாருக்கு துப்பு கிடைத்துள்ளது. 
கைது செய்யப்பட்ட ஆலமிடம் இருந்து போலீஸார், கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகையையும், பணத்தையும் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து ஆலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.