தொழிலாளர் நல வாரிய உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் 77 -ஆவது கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அமைச்சர் நிலோபர் கபில் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கல்வி உதவித் தொகையானது ரூ.2 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் என்று இருந்தது. இது ரூ.4 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. திருமண உதவித் தொகை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரம் என்றிருந்ததை மாற்றி ஆண்-பெண் இரு பாலருக்கும் ரூ.10 ஆயிரமாகவும் வழங்கப்படும். கல்வி ஊக்கத் தொகை, பாடநூல் உதவித் தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் டிசம்பர் 31 -ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இயற்கை மரணம், விபத்து மரண உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு ஆறு மாதங்களில் இருந்து 12 மாதங்களாக நீட்டிக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.