எடை அளவுகளுக்கு முத்திரை: வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தி வரும் எடையளவுகளை நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளியில் முத்திரையிட்டுக் கொள்ளுமாறு
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தி வரும் எடையளவுகளை நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளியில் முத்திரையிட்டுக் கொள்ளுமாறு திருவள்ளூர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆ. வளர்மதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவரது செய்திக் குறிப்பு:
சட்டமுறை எடையளவு சட்டம், 2009-ன்படி கடைகள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்பாட்டிலுள்ள எடையளவுகளை நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளியில் பரிசீலனை செய்து முத்திரையிட்ட பின்னரே பயன்படுத்த வேண்டும்.
அவ்வாறு முத்திரையிடப்படாமல் உபயோகத்திலுள்ள எடையளவுகள் தொழிலாளர் துறை அலுவலர்களால் கண்டறியப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்திட, எடையளவுகளை தவறாது பரிசீலனை செய்து முத்திரையிட வேண்டும்.
சென்னை, தொழிலாளர் ஆணையர் மற்றும் சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் இது குறித்து திடீராய்வு மற்றும் கூட்டாய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே, பறிமுதல், அபராதம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்த்திட, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தி வரும் எடையளவுகளை நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளியில் பரிசீலனை செய்து முத்திரையிட்டுக் கொள்ள வேண்டும்.