சென்னை, ராயபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சென்னை, சேத்துப்பட்டு பச்சையப்பன் கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் பிரேமா. இவருக்கு ராயபுரம், சூரிய நாராயணன் தெருவில் சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டை பிரேமா, மீரான் (32) என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். வீட்டை காலி செய்யவது தொடர்பாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது.
நீதிமன்ற வழக்கையடுத்து மீரான் வீட்டை காலி செய்வதற்காக நீதிமன்ற ஊழியர்கள் வெள்ளிக்கிழமை வந்தனர். அவர்கள், அங்கு வீட்டை காலி செய்யும் பணியில் ஈடுபட்டபோது, அந்த வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து மீரானை தேடி வருகின்றனர்.