பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலைகள், நடைபாதைகள், தெருக்களில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த வாகனங்களை 15 நாள்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலையோரங்கள், நடைபாதைகள், தெருக்கள் ஆகியவற்றில் பழுதடைந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
மேலும், இந்த வாகனங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியும், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே, இந்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் 15 நாள்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்.
ஏலம் விட நடவடிக்கை: அவ்வாறு அப்புறப்படுத்தப்படாத வாகனங்களைக் காவல் துறை உதவியுடன் அப்புறப்படுத்தி வட்டவாரியாக இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு இந்த வாகனங்களை நிறுத்தி வைக்கப்பட்டு ஏலத்தில் விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.