வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை முதல் அலகில் கொதிகலன் பழுது காரணமாக மின்உற்பத்தி தடைப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை முதல் அலகில் கொதிகலன் பழுது காரணமாக மின்உற்பத்தி தடைப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது: சென்னையை அடுத்த அத்திப்பட்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் சொந்தமாக அனல் மின்நிலைய வளாகம் உள்ளது. இங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 3 அலகுகள் உள்ளன. அந்த வளாகத்திலேயே தலா 600 மெகாவாட் திறன்கொண்ட 2 அலகுகளைக் கொண்ட விரிவாக்க மின்நிலையங்களும் உள்ளன.
இந்நிலையில், முதல் அலகில் உள்ள பாய்லர் டியூப் பஞ்சர் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. கோடை காலத்தில் ஏற்படும் அதிகளவு மின்தேவையைக் கருத்தில் கொண்டு அனைத்து மின்உற்பத்தி நிலையங்களிலும் முழு அளவு மின்உற்பத்தியை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு முக்கிய மின்நிலையமாக உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் 600 மெகாவாட் உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பழுது ஓரிரு நாளில் சரிசெய்யப்பட்டு, மின்உற்பத்தி மீண்டும் துரிதமாகத் தொடங்கப்படும். இதேபோன்று தூத்துக்குடியில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகளில் 2}ஆவது அலகில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பழுதும் விரைந்து சீர்செய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.