தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்த முதல்வர் ஸ்டாலின் பற்றி...
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின், கருப்புக் கொடியும் ஏற்றி தனது எதிர்ப்பு தெரிவித்தார்.
மக்களவை மற்றும் பேரவைகளில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை 2029 ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏற்றவகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் இந்த அமர்வு நடைபெறுகிறது.
மகளிர் இடஒதுக்கீட்டின் பின்னணியில், மத்திய அரசு முன்மொழிந்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Advertisement
திமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் தங்களது கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்திய நிலையில், இன்று சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்ற வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், கருப்பு உடை அணிந்து, தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 11 மணிக்கு தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசை கண்டித்து இன்று ஏற்றப்பட்ட கருப்புக்கொடியை அடுத்த 3 நாள்களுக்கு பறக்கவிட திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.