தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்த முதல்வர் ஸ்டாலின் பற்றி...
நாடாளுமன்றத்தில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுவதையொட்டி, அந்த தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் நாமக்கல்லில் இன்று (ஏப்.16) காலை கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டார்.
மக்களவை மற்றும் பேரவைகளில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை 2029 ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏற்றவகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் இந்த அமர்வு நடைபெறுகிறது.
மகளிர் இடஒதுக்கீட்டின் பின்னணியில், மத்திய அரசு முன்மொழிந்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Advertisement
Advertisement
நாடாளுமன்றத்தில் இந்த தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கடுமையாக பாதிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கட்சியினர், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடுவர் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
திமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் தங்களது கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்திய நிலையில், இன்று சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்ற வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சேலத்தில் புதன்கிழமை இரவு பிரசாரத்தை முடித்துக் கொண்டு நாமக்கல்லுக்கு இரவு வந்து சேர்ந்தார் முதல்வர் ஸ்டாலின்.
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள தனியார் நட்சத்திர உணவகத்தில் தங்கி இருந்த முதல்வர், வியாழக்கிழமை காலை 7.20 மணி அளவில் நல்லிபாளையத்தில் மேற்கு நகர அவை தலைவர் என்.கே. செல்லப்பன் வீட்டின் முன் நிறுவப்பட்டிருந்த 20 அடி உயர கொடிக்கம்பத்தில் கருப்பு கொடியை ஏற்றி வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
அதன் பிறகு தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை அவர் தீயிட்டு கொளுத்தி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, “போராடும்... போராடும்.. வெல்வோம் ஒன்றாக.. தமிழ்நாடு வெல்லட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என அவர் முழக்கமிட கட்சி நிர்வாகிகள் அனைவரும் இணைந்து முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தின் போது திமுகவினர் கருப்பு நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தனர்.
மாநிலம் முழுவதும் இன்று (ஏப்.16) காலை 11 மணிக்கு தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசை கண்டித்து இன்று ஏற்றப்பட்ட கருப்புக்கொடியை அடுத்த 3 நாள்களுக்கு பறக்கவிட திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.