நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின் பற்றி...
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்தார்.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஆறு நாள்களே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் முழுவீச்சில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தைக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை புரிந்தார்.
Advertisement
அங்குள்ள விவசாயிகள், பொதுமக்களிடம் அவர் திமுக வேட்பாளர் ப. ராணியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
விவசாயிகள் தங்களுடைய பிரச்னைகளை, குறைகளை முதல்வரிடம் கூறினர். கிராமப்புற விவசாயிகள் சிலர் அவருக்கு பழங்கள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மக்களுடன் கைகளை குலுக்கி ஆதரவு கோரி தங்கும் உணவகத்துக்குப் புறப்பட்டு சென்றார்.
நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொம்மைக்குட்டை மேட்டில், நாமக்கல் மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் பிரசாரம் மேற்கொள்ளும் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது.
வாக்கு சேகரிப்பு நிகழ்வின் போது, அமைச்சர் மா. மதிவேந்தன், மாவட்டச் செயலர் கே. ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி, பெ. ராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் இருந்தனர்.