பகுதிநேர மாற்றுத்திறன் ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி கலைப் பாடங்களுக்கான அரசுப் பள்ளி பகுதிநேர மாற்றுத்திறன்
இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி கலைப் பாடங்களுக்கான அரசுப் பள்ளி பகுதிநேர மாற்றுத்திறன் ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ளிருப்பு ப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், ஆறு ஆண்டுகளுக்கு மேல் பகுதிநேர ஆசிரியர்களாக தொகுப்பூதியத்தில் கலைப் பாடங்களை போதிக்கும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற அரசாணையை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 40-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் ஆசிரியர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்தில் திங்கள்கிழமை காலை 11 மணி முதல் இரவு கடந்தும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் கூறுகையில், எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பள்ளிக் கல்விக் இயக்குநரை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தோம். அப்போது இது மத்திய அரசு தொடர்பான கல்வித் திட்டத்தின் கீழ் வருகிறது என அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர், மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான ஆணையர் ஆகியோர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும். அரசாணையை நிறைவேற்றுவதன் மூலம் 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் ஆசிரியர்கள் பயன்பெறுவர் என தெரிவித்தனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.