பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாற்றி அமைக்கப்பட்ட தண்டவாளத்தில் வேகக் கட்டுப்பாடு இன்றி விரைவு ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருமால்பூருக்கு கடந்த ஜூலை 24-ஆம் தேதி மின்சார ரயில் சென்றபோது, படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தவர்கள், பரங்கிமலை ரயில் நிலையத் தடுப்புச் சுவரில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர். இதுதவிர, ரயில்வே நிர்வாகம் சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கும், படுகாயமடைந்தோருக்கும் நஷ்டஈடு வழங்கப்பட்டது. இதையடுத்து, பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்த நடைமேடை மற்றும் தண்டவாளத்தை மாற்றி அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கான பணியை ரயில்வே நிர்வாகம் தொடங்கியது. இதனால், அந்த வழித்தடத்தில் செல்லும் விரைவு ரயில்கள் பரங்கிமலை ரயில் நிலையத்தில் வேகக் கட்டுப்பாடுடன் செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து, ரயில்கள் பரங்கிமலை ரயில் நிலையத்தில் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
இதற்கிடையில், தண்டவாளத்தை மாற்றி அமைக்கும் பணி கடந்த சில நாள்களுக்கு முன் முடிவடைந்தது. இதுதவிர, நடைமேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை ரயில்வே அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாற்றி அமைக்கப்பட்ட தண்டவாளத்தில் வேகக் கட்டுப்பாடு இன்றி விரைவு ரயில் சனிக்கிழமை காலை இயக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாற்றி அமைக்கப்பட்ட தண்டவாளத்தில் விரைவு ரயில் சோதனை ஓட்டம் மட்டுமே நடந்துள்ளது.