முகப்பு
சென்னை

சாதி, மத பாகுபாடில்லாமல் அனைவரையும் மதித்தவர் ஸ்ரீ ஜயேந்திரர்

சாதி, மத பாகுபாடில்லாமல் அனைத்துத் தரப்பு மக்களையும் மதித்தவர் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் புகழாரம்

Updated On : 11 மார்ச், 2018 at 4:19 AM
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சியில் (இடமிருந்து) ஸ்ரீ கிருஷ்ண கான சபா இணைச் செயலர் ஆர்.வெங்கடேஸ்வரன், டாடா கன்சல்டன்சி ந
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:57 PM

சாதி, மத பாகுபாடில்லாமல் அனைத்துத் தரப்பு மக்களையும் மதித்தவர் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் புகழாரம் சூட்டினார்.
சித்தியடைந்த காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு ஸ்ரீ கிருஷ்ண கான சபா அறக்கட்டளை சார்பில் ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சி சென்னை தியாகராயர் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக சித்தியடைந்த ஜயேந்திரரின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பேசியது: இந்து தர்ம கொள்கைகளை சாதி, மத வேறுபாடு பாராமல் அனைத்துத் தரப்பு மக்களிடமும் எடுத்துச் சென்றவர் ஸ்ரீ ஜயேந்திரர். ஒவ்வொரு கிராமத்திலும் இந்து தர்மத்தைக் கொண்டு சேர்த்தவர். மீனவர்கள், தலித் மக்கள் என நலிவடைந்த மக்களிடமும் எவ்வித பாகுபாட்டையும் பாராமல் அன்போடு பழகியவர். உதவி என கேட்டு வருபவர்கள் கேட்கும் முன்பே, அவர்களின் தேவையறிந்து உரிய உதவிகளை செய்யும் நற்பண்புள்ளவர்.
நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல இந்து கோயில்களைத் திறந்து வைத்தவர். குறிப்பாக சாதாரண நலிவடைந்த மக்கள் தங்கள் பகுதிகளில் கோயில் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தால் அதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதோடு, அவரே நேரில் சென்று திறந்து வைத்து அப்பகுதி மக்களுக்கு ஆசி வழங்குவார்.
அலுவல் ரீதியாக பல இடங்களுக்குச் செல்லும்போது அப்பகுதியில் கோயில், ஆதீன மடம் இருந்தால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, சாதாரணமாக வந்து பார்வையிட்டுச் செல்வார். தம் வாழ்நாள் முழுவதும் எளிமையைக் கடைப்பிடித்ததுடன், அனைவரையும் சமமாகப் பாவித்து பழகியவர் ஸ்ரீ ஜயேந்திரர் என்றார் அவர். 
சென்னை மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சுதா 
சேஷய்யன்: ஒரு தாய் எப்படி தம் மக்களிடம் பரிவு காட்டுவாளோ அதே போன்று அனைவரிடமும் அன்பையும், பரிவையும் காட்டியவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். ஒரு குழந்தை எப்படி தன் தாயிடம் பேசுமோ, அதைப்போன்று எவ்வித கள்ளம் கபடம் இல்லாமல் அவரிடம் நாம் பேசலாம். ஒருவரின் தேவைகளைச் சொல்வதற்கு முன்பே அதை அறிந்து நிறைவேற்றுபவர். பாகுபாட்டை முற்றிலும் களைந்த அந்தக் குருவை (ஸ்ரீ ஜயேந்திரர்) பின்பற்றி, அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை நாமும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
பரத நாட்டியக் கலைஞர் பத்மா 
சுப்ரமணியம்: ஸ்ரீ ஜயேந்திரருடன் சரஸ்வதியும், மகாலட்சுமியும் ஒன்றுசேர இருந்தனர். நான் ஒரு முறை தெருக்கூத்து அழிந்து வருகிறது என்று அவரின் கவனத்துக்கு எடுத்துச் சென்ற உடனேயே, அதை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தார். காஞ்சியில் அவரே நேரடியாகக் களத்தில் இறங்கி, தெருக்கூத்து நடத்த ஏற்பாடு செய்து, அதை அவரே நேரில் கண்டுகளித்தார். இதனால் அவருடைய சீடர்களும் அங்கு வந்து அந்தக் கலையின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து ஆண்டு தோறும் காஞ்சியில் தெருக்கூத்து நடத்த ஏற்பாடு செய்த மகான் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றார்.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி:
இந்த நாடு வளம் பெற வேண்டும் என்று விரும்பியவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். அதில் இந்து தர்மம் நிலைக்க வேண்டும் எனப் பாடுபட்டவர். ஆன்மிகம், இந்து தர்மத்தை மேம்படுத்த ஏராளமான உதவிகளைச் செய்தவர். தமிழகத்தில் ஆன்மிகச் சிந்தனை அதிகமாகக் காரணமாக இருப்பவர். மத நல்லிணக்கம் மேம்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தியவர் ஸ்ரீ ஜயேந்திரர் என்றார்.
இசைக் கலைஞர் டி.என்.
சேஷகோபாலன்: சங்கீதத்தில் தனி ஈடுபாடு கொண்டவர். அது நாம ஸங்கீர்த்தனமாக இருந்தாலும், சாதாரணக் கச்சேரி என்றாலும் சரி, அதீத ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு ரசிப்பார். கீர்த்தனைகள் அத்தனையும் பாடும் திறன் கொண்டவர் ஸ்ரீ ஜயேந்திரர் என்றார்.
தொல்லியல் அறிஞர் ஆர்.நாகசுவாமி: ஸ்ரீ ஜயேந்திரர் எப்போதும், எந்தச் சூழலிலும் சிரித்த முகத்தோடு இருப்பவர். மிகச் சிறந்த நிர்வாகி என்றார்.
பங்கேற்றோர்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராம தீட்சிதர், டாடா கன்சல்டன்சி நிறுவன நிர்வாகி கே.ஜெயராமகிருஷ்ணன், ஸ்ரீ கிருஷ்ண கான சபா பொதுச்செயலர் ய.பிரபு, இணைச் செயலர் ஆர்.வெங்கடேஸ்வரன் ஆகியோர் பங்கேற்று ஸ்ரீ ஜயேந்திரருக்கு நினைவஞ்சலி செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.