திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
திருச்சூர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருச்சூர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:
Advertisement
திருச்சூரில் உள்ள பட்டாசுத் தயாரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் பல உயிர்கள் பலியான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
கேரளத்தில் பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழா ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முண்டத்திகோடு பகுதியில் உள்ள திருவம்பாடி கோயிலுக்காக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.
ஓலை கொட்டகை அமைத்து பாதுகாக்கப்பட்டு வந்த பட்டாசுகள் கடும் கோடை வெய்யிலில் திடீரென வெடித்து விபத்து நேர்ந்துள்ளதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன. பட்டாசு தயாரிக்கும் பணியில், 70 தொழிலாளர்கள் வரை ஈடுபட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் கந்தனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்த விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.