சென்னையில் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக 23 பேரிடம் மோசடி செய்ததாக, இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் அ.செல்வராஜ் (58), வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரிடம் கேளம்பாக்கம் எம்.ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த சு.லிங்கபாண்டியன் (60), அவரது கூட்டாளி ந.முத்துக்குமார் (43) ஆகியோர் செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினர். அவர்களது பேச்சை நம்பி செல்வராஜ், இருவரிடமும் பணம் கொடுத்தார்.
இதேபோல அங்கு வீடு வாங்குவதற்காக இருவரிடமும், 23 பேர் மொத்தம் ரூ.14.95 லட்சம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட இருவரும் வீடு வாங்கிக் கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி அளிக்காமல் ஏமாற்றினராம். பணத்தை திருப்பிக் கேட்பவர்களை, இருவரும் மிரட்டியுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள், ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் லிங்கபாண்டியன், முத்துக்குமார் ஆகியோர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக, விசாரணை செய்து வருகின்றனர்.