சிபிசிஐடி விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலை ஓய்வு பெற அனுமதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் , சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவரை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்துள்ளது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சேகரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
குஜராத் மாநிலத்தில் உள்ள சாராபாய் அறக்கட்டளையில் இருந்து மீட்கப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் உண்மையானவை இல்லை எனக்கூறி, இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே சிபிசிஐடி விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் பொன் மாணிக்கவேலை பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதித்தது தவறு. அவர் மீது சட்டப்படி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.