முகப்பு
சென்னை

லஞ்சம் : 3 சார்-பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது வழக்கு

லஞ்சப் புகார் தொடர்பாக சென்னை ராயபுரம், அசோக்நகர், திருப்போரூர் சார்-பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது  ஊழல் தடுப்புக் கண்காணிப்புப்பிரிவு போலீஸார்   வழக்குப் பதிவு செய்தனர். 

Updated On : 26 பிப்ரவரி 2019, 4:13 am IST
பகிர்:


லஞ்சப் புகார் தொடர்பாக சென்னை ராயபுரம், அசோக்நகர், திருப்போரூர் சார்-பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது  ஊழல் தடுப்புக் கண்காணிப்புப்பிரிவு போலீஸார்   வழக்குப் பதிவு செய்தனர். 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:
சென்னை கே.கே.நகரில் உள்ள அசோக்நகர் சார்- பதிவாளர் அலுவலகத்தில் சில ஊழியர்கள் கையூட்டு  வாங்குவதாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில்,  கடந்த 18-ஆம் தேதி போலீஸார்,அங்கு மேற்கொண்ட திடீர் சோதனையில்,   கணக்கில் வராத ரூ.1.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைப்போல, திருப்போரூரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சமும், ராயபுரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.74 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, கடந்த 20-ஆம் தேதி அடையாறு, கஸ்தூரிபாய் நகரில் உள்ள அசோக்நகர் சார்- பதிவாளர் பிரவீணா வீட்டில்  நடத்திய சோதனையில், அங்கிருந்த  சொத்து ஆவணங்களையும்,  இதைப்போல, திருவண்ணாமலையில் உள்ள திருப்போரூர் சார்-பதிவாளர் பழனியின் வீட்டில்  கணக்கில் வராத ரூ.5.90 லட்சத்தையும், நுங்கம்பாக்கத்தில் உள்ள ராயபுரம் சார்-பதிவாளர் வெங்கடேசன் வீட்டில்  நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரொக்கம்,  சொத்து ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சார்-பதிவாளர்கள் மீது வழக்கு:  இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சார்-பதிவாளர்கள் 3 பேர் மீதும், அங்குள்ள சில ஊழியர்கள் மீதும் 3 வழக்குகளை தனித்தனியாக பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, ராயபுரம் சார்-பதிவாளர் வெங்கடேசன், அந்த அலுவலக தாற்காலிக ஊழியர் சுந்தர், ஆவண எழுத்தர் பாத்திமா என்ற வெண்மால், அசோக்நகர் சார்-பதிவாளர் பிரவீணா, அலுவலக இளநிலை உதவியாளர் சுகவனம், கணினி ஆபரேட்டர் உமா  பரமேஸ்வரி, கேமரா ஆபரேட்டர் ரேவதி, திருப்போரூர் சார்-பதிவாளர் பழனி மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த 3 வழக்குகளிலும் மொத்தம் 8 பேர் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் தொடர்பாக  விரைவில் விசாரணை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.