தன் மீதான குற்ற வழக்கை மறைத்து, வழக்குரைஞராகப் பதிவு செய்தவரை வழக்குரைஞராகச் செயல்பட தடை விதித்து தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, வடபழனியைச் சேர்ந்த வழக்குரைஞர் வசந்த மூர்த்தி மீது, தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சிலில் சங்கர் என்பவர் புகார் மனு அளித்தார். அந்தப் புகாரில், வசந்த மூர்த்தி தன் மீதான குற்ற வழக்கை மறைத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் புகார் குறித்து விசாரித்த, மூத்த வழக்குரைஞர் சிங்காரவேலன் தலைமையிலான தமிழ்நாடு- புதுச்சேரி பார்கவுன்சிலின் ஒழுங்கு நடவடிக்கை குழு, குற்ற வழக்குகளை மறைத்து வழக்குரைஞராகப் பதிவு செய்வதை ஏற்க முடியாது.
எனவே வசந்த மூர்த்தி, தன் மீதான குற்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படும் வரை, அவரது வழக்குரைஞர் பதிவை நிறுத்திவைப்பதாகவும், அதுவரை, வழக்குரைஞராக பணியாற்ற தடைவிதிப்பதாகவும் உத்தரவிட்டுள்ளது.