மக்களவை தேர்தலுக்கான நடத்தைவிதிகளை மீறியதாக, சென்னையில் இதுவரை 33 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இடைத் தேர்தலும் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் கடந்த 9ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. மக்களவைத் தேர்தலை, எவ்வித வன்முறைச் சம்பவங்களும், முறை கேடுகளுமின்றி, அமைதியாக நடத்துவற்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தேர்தல் தொடர்பான புகார்களைப் பெறுவதற்காக, சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் மாநில தேர்தல் கட்டுப்பாட்டு அறை அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது. இதைப்போல, சென்னை பெருநகர காவல்துறை யிலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவினர், பல்வேறு இடங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பாக , சென்னையில், ஒருவாரத்தில் மட்டும், அனுமதியின்றி சுவர்களில் அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்ததாக 33 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர். அரசியல் கட்சியினர் பிரசாரம் முழுமையாக தொடங்கிய பிறகே, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.