சென்னையில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
வில்லிவாக்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் ஆய்வாளராகப் பணிபுரிபவர் தமிழழகன். இவரிடம், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பணப் பிரச்னை தொடர்பாக புகார் செய்ததாக கூறப்படுகிறது. இதில் புகார் அளித்தவரையும், பணத்தை ஏமாற்றிய தரப்பையும் தமிழழகன் அழைத்து பேசினாராம்.
பின்னர், பணத்தை ஏமாற்றிய நபரிடம் குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என தமிழழகன் எழுதி வாங்கியுள்ளார். மேலும், அந்த நபரிடம், தான் வழக்குப் பதியாமல் இருந்ததற்கு ரூ.1 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என தமிழழகன் கேட்டாராம்.
இது குறித்து அந்த நபர், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அந்த நபரிடம் ரூ.20 ஆயிரத்தை கொடுத்து, அதை லஞ்சமாக தமிழழகனிடம் வழங்கும்படி தெரிவித்தனர். இதையடுத்து அந்த நபர், அண்ணாநகர் காவலர் குடியிருப்பில் உள்ள தமிழழகனின் வீட்டிற்கு புதன்கிழமை சென்று, ரூ.20 ஆயிரம் லஞ்சப் பணத்தை அளித்தார்.
அங்கு தமிழழகன் ரூ.20 ஆயிரம் லஞ்ச பணத்தை பெற்றதும், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் தமிழழகனை கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸார், தமிழழகனிடம் விசாரணை நடத்தினர்.