தனியார் ரயில்களை இயக்குவதற்காக தமிழகத்தில் 6 வழித்தடங்கள், ஒரு புறநகர் பிரிவு ஆகியவற்றை இந்திய ரயில்வே அடையாளம் கண்டுள்ளது. 100 நாள் செயல்திட்டத்தில் ஒரு பகுதியாக, பயணிகள் சேவையை மேம்படுத்தவும், தனியார் ரயில் இயக்கவும் அனுமதி வழங்க ரயில்வே அமைச்சரகம் ஒப்புதல் அளித்தது.
ரயில்வே துறையின் வருவாயைப் பெருக்கவும், பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும் வகையில், முக்கிய வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக வட மாநிலங்களில் 2 தனியார் ரயில்களை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.டி) வாயிலாக இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தனியார் ரயில்கள் இயக்குவதற்காக தமிழகத்தில் 6 வழித்தடங்கள், ஒரு புறநகர் பிரிவு ஆகியவற்றை இந்திய ரயில்வே நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது. சென்னை - பெங்களூரு, சென்னை - மதுரை, சென்னை - தில்லி, சென்னை - கோயம்புத்தூர், சென்னை - ஹெüரா, சென்னை - மும்பை ஆகிய 6 வழித்தடங்களும், சென்னை புறநகர் பிரிவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், மும்பை, செகந்திரபாத், கொல்கத்தா ஆகிய புறநகர் பிரிவுகளிலும் தனியார் ரயில் இயக்குவதற்கு உள்ள சாத்தியகூறுகளை ஆய்வு செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தனியார் ரயில் இயக்குவதற்கு உள்ள வாய்ப்புகள் தொடர்பாக தெற்கு ரயில்வே தலைமை வணிக மேலாளர் மற்றும் 4 பேரிடம் ரயில்வே வாரியம் திங்கள்கிழமை விவாதித்துள்ளது. இதில், அடையாளம் காணப்பட்ட வழித்தடத்தில் ரயில் இயக்குவதற்கு உள்ள வாய்ப்புகள், திறன், சேவைகள் எண்ணிக்கை ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனியார் ரயில் செயல்பாட்டாளர்கள் ஏல செயல்முறை மூலம் அடையாளம் கண்டு, ரயிலை இயக்க அனுமதிக்கப்படுவார்கள். ரயில்வேயுடன் சலுகை ஒப்பந்தத்தின்படி, நவீன பயணிகள் ரயிலை இயக்குவதற்கும், கட்டணத்தை தீர்மானிக்கவும் தனியார் செயல்பாட்டாளருக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.