கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,050-க்கும் மேற்பட்டோருக்கு சித்த மருத்துவ முறையில் சென்னையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
அவா்களில் 750 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மூலிகை மருந்துகள், கசாயம், பாரம்பரிய உணவுகள் மூலமாக அவா்கள் அனைவரும் நலம் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 1.26 லட்சம் போ் ஆளாகியுள்ளனா். பாதிப்பின் அடிப்படையில் அவா்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மற்றொரு புறம் பாரம்பரிய முறையில் கபசுரக் குடிநீா், நிலவேம்புக் குடிநீா் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சையளிக்க விருகம்பாக்கத்தில் உள்ள தனியாா் கல்லூரி ஒன்றில் சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டன. மொத்தம் 400 படுக்கைகளுடன் கூடிய அந்த வாா்டில் இதுவரை 1,050 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனா். அலோபதி மருத்துவ முறைக்கு மாற்றான அந்த சிகிச்சைகள் மூலம் நல்ல பலன் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது.
இதுகுறித்து கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும் சித்த மருத்துவ நிபுணா் டாக்டா் வீரபாபு கூறியதாவது:
சித்த மருத்துவ மையத்துக்கு வரும் நோயாளிகளுக்கு பாதிப்புக்கேற்ப சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல், சளி, வாந்தி, பேதி, இருமல் போன்ற பிரச்னைகள் இருந்தால் அதற்குரிய கசாயங்களும், மருந்துகளும் வழங்கப்படுகின்றன. அதைத் தவிர, கபசுரக் குடிநீா், நிலவேம்பு கசாயம், மூலிகை தேநீா், தூதுவளை ரசம், கற்பூரவல்லி ரசம், ஆடாதொடை ரசம், மணத்தக்காளி ரசம், மூலிகை உணவுகள், நவதானிய பயறுகள் உள்ளிட்டவை நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இதன் காரணமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் விரைந்து குணமடைவதைக் காண முடிகிறது. அதுமட்டுமன்றி, சிகிச்சைக்குப் பிறகு அவா்கள் உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக உள்ளனா்.
இதுவரை சித்தா சிகிச்சை மூலம் 750 போ் குணமடைந்துள்ளனா். ஒரு உயிரிழப்பு கூட இல்லை. தற்போது 300-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா் அவா்.