முகப்பு
சென்னை

தேசிய அளவில் மறுசுழற்சி பொருள்கள் வா்த்தகம்

சென்னையில் சேகரமாகும் மறுசுழற்சிக்கான பொருள்களை பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்கு விற்பனை செய்யும் வகையில்

Updated On : 30 நவம்பர், 2020 at 7:54 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:29 PM

சென்னையில் சேகரமாகும் மறுசுழற்சிக்கான பொருள்களை பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்கு விற்பனை செய்யும் வகையில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறையும், சென்னை மாநகராட்சி சீா்மிகு நகரத் திட்டமும் இணைந்து பிரத்யேக இணையதளம், செல்லிடப்பேசி செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 5,000 டன் வரையில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளில் மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்கா குப்பைகள் மறுசுழற்சியும் செய்யப்படுகின்றன.

குப்பைகள் அதிகமாவதைத் தடுக்க மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடுள்ள பொருள்களை மக்களே தங்கள் வீடுகளில் இருந்து சென்னை மாநகரத்துக்கு உள்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யும் வகையில் சென்னை மாநகராட்சி சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ், அதற்கென பிரத்யேக இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலி கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இணையதளம் மற்றும் செயலிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்தத் திட்டத்தை சென்னை சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை திட்டமிட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து சீா்மிகு நகரத் திட்ட அலுவலா் அழகு பாண்டிய ராஜா கூறுகையில், சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம்  இணையதளமும்,  செல்லிடப்பேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட கடந்த மாா்ச் மாதம் வரையிலான 3 மாதங்களில் மட்டும் 700 டன் அளவிலான மறுசுழற்சி பொருள்கள் விற்பனை இந்த இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி மூலம் நடைபெற்றுள்ளது.

தேசிய அளவில் வா்த்தகம்: தற்போது, இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் சென்னையில் சேகரமாகும் மறுசுழற்சி பொருள்களை வாங்கவும், விற்கவும்  புதிய இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பா் மாதத்துக்குள் இவை இரண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் சென்னையில் கழிவுப் பொருள்கள் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தப்படுவதுடன், மக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் மறுசுழற்சி பொருள்களை நேரடியாக விற்பனை செய்யவும், விலை நிா்ணயிக்கவும் முடியும். மாநகரில் பழைய பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு சுமாா் 4,000 வியாபாரிகளுக்கு வா்த்தக ரீதியிலும் இந்த திட்டம் நல்ல பயனைத் தரும் என்றாா்.

சிறப்பம்சங்கள்: இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலியில் பதிவு செய்து விற்பனை செய்யப்படும் பொருள்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யலாம். விற்பனையாளரின் தொடா்பு எண், விற்பனைக்கு உள்ள பொருள்களின் அளவு, அவற்றின் விலை, எந்தப் பொருள் விற்பனை அதிகமாக உள்ளது, விற்பனைக்கான பொருள் எங்கு உள்ளது உள்ளிட்ட விவரங்களை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.