ஒடிசா கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கிலம்!
ஒடிசா கடற்கரையில் சுமார் 10 டன் எடைகொண்ட ராட்சத திமிங்கிலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
ஒடிசா கடற்கரையில் சுமார் 10 டன் எடைகொண்ட ராட்சத திமிங்கிலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
ஒடிசா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள மதாலி கடற்கரையில் 32 அடி நீளம் கொண்ட அழிந்து வரும் இனத்தைச் சேர்ந்த பிரைடு திமிங்கிலம் கரை ஒதுங்கியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். சுமார் 10 டன் எடைகொண்ட பிரம்மாண்டமான பாலூட்டி, கஹிர்மாதா கடல்சார் சரணாலயத்திற்கு உட்பட்ட மதாலி கடற்கரையில் கண்டறியப்பட்டது.
கடற்கரையில் இருந்து இறந்த திமிங்கிலத்தின் உடலை அகற்றுவது வனத் துறை ஊழியர்களுக்கு மிகவும் சவாலான பணியாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பாலூட்டியின் எலும்புக்கூட்டை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வனத் துறை திட்டமிட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
Advertisement
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், திமிங்கிலத்தின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த பிறகு, அதைப் புதைப்பதா வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. உடலில் காயங்கள் இருப்பதால், கப்பல் அல்லது விசைப்படகு விசிறிகளில் மோதியதால் இந்த திமிங்கலம் இறந்திருக்கலாம் என்றனர்.
"பிரேதப் பரிசோதனை போன்ற சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்த பிறகு, திமிங்கிலத்தின் எலும்புக்கூட்டைப் பாதுகாப்பது குறித்துத் துறையின் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனைகளைக் கேட்போம்," என்று அதிகாரி ஒருவர் கூறினார். திமிங்கலம் இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிய அதன் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படும் என்று வனத் துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதனிடையே இறந்த ராட்சத திமிங்கிலத்தைப் பார்ப்பதற்காக மீனவர்கள் உட்பட ஏராளமான கிராம மக்கள் கடற்கரையில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.