மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஒடிசாவில் வெப்பத் தாக்குதலுக்கு இரு ஆசிரியர்கள் பலி!
வெப்பத்தாக்குதலுக்குப் பலியான ஆசிரியர்கள் பற்றி..
ஒடிசா மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பள்ளி ஆசிரியர்கள் இருவர் வெப்பத் தாக்குதலுக்குப் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடை வெப்பம் கொளுத்திவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களும் வெப்பத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு ஆசிரியர்கள் வெப்பத் தாக்குதலுக்குப் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவங்கள் மயூர்பஞ்ச், சுந்தர்கர் மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளன. இம்மாவட்டங்களில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. மாநிலத்தில் இதுபோன்று நிகழும் மூன்றாவது சம்பவமாகும் இதுவாகும்.
Advertisement
Advertisement
மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பேட்டனாட்டி பகுதியிலிருந்து வந்த தகவலின்படி,
பேட்டனாட்டி வட்டாரத்திற்கு உள்பட்ட வைத்யநாத் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியரான ராஜ்கபூர் ஹெம்ப்ராம், ஞாயிறன்று பாரிபடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியை முடித்துத் திரும்பியபோது ராஜ்கபூர் மயக்கமடைந்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்காக அவருக்கு மூன்று கிராமங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாக அவரது பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
உடல்நலக்குறைவு இருந்தபோதிலும், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளைத் தொடருமாறு அதிகாரிகள் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாக, உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
சுந்தர்கர் மாவட்டத்திலிருந்து வந்த மற்றொரு தகவலின்படி, குருண்டியா வட்டாரத்திற்கு உள்பட்ட ஜராடா அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியரான அனுராக் என்பவர் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியின்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
முதலில் அவர் குருண்டியா சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கு முன்னதாக, சோனேபூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை முடித்துத் திரும்பிய கணக்கெடுப்பாளர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.