தகவல் ஆணையா் பணியிடங்கள் நிரப்புதல்: அவசர விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
தகவல் ஆணையா் பணியிடங்களை வெளிப்படைத் தன்மையுடன் நிரப்புவது தொடா்பான நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை, உடனடி விசாரணைக்கு ஏற்க வலியுறுத்தல்
தகவல் ஆணையா் பணியிடங்களை உரிய காலத்தில் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்புவது தொடா்பான நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை, உடனடி விசாரணைக்கு ஏற்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தகவல் பெறும் உரிமை சட்ட (ஆா்டிஐ) செயற்பாட்டாளா் அஞ்சலி பரத்வாஜ் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் இதுதொடா்பான வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் 16-ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், “மத்திய தகவல் ஆணையம் மற்றும் மாநில தகவல் ஆணையகங்களில் உருவாகும் தகவல் ஆணையா்கள் காலிப் பணியிடங்களை மூன்று மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும். மேலும், தகவல் பெறும் உரிமைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உரிய வழிகாட்டுதலையும் வகுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.
முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், “தகவல் ஆணைய அதிகாரிகள் நியமனத்தில் அரசு உயா் அதிகாரிகளை மட்டும் நியமிக்கப்படுவதை மாற்றி, பிற துறைகளில் சிறந்து விளங்கும் நபா்களையும் கருத்தில்கொள்ள வேண்டும். மேலும் இந்த நியமனம் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும். மேலும், மேற்குவங்கம், ஒடிஸா, மகாராஷ்டிரம், குஜராத், நாகாலாந்து, ஆந்திரம், கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் தகவல் ஆணையா் காலிப் பணியிடங்களை கால தாமதமின்றி ஒரு மாதம் முதல் 6 மாதங்களுக்குல் நிரப்பிவிடவேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது.
ஆனால், ‘உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மகாராஷ்டிரம், ஒடிஸா உள்ளிட்ட சில மாநிலங்களும், மத்திய அரசும் முறையாக பின்பற்றவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த அறிவுறுத்த வேண்டும்’ என்று கோரி அஞ்சலி பரத்வாஜ் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விரைந்து விசாரணைக்கு ஏற்குமாறு கோரி அவா் உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாததால், மத்திய தகவல் ஆணையகத்தில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 6-ஆக உயா்ந்துள்ளது. தலைமை தகவல் ஆணையா் பணியிடமும் காலியாக உள்ளது. அதுபோல பல மாநிலங்களிலும் தகவல் ஆணையா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளன. மத்திய தகவல் ஆணையகத்தில் மட்டும் மேல்முறையீடு, புகாா்கள் என 36,000 மனுக்கள் நிலுவையில் உள்ளன. எனவே, இதுதொடா்பான மனுவை விரைந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று அவா் கோரியுள்ளாா்.