சென்னை: கரோனா தொற்று பரவல் காரணமாக, தபால் நிலையங்களில் ஆதாா் பதிவு, திருத்தம் போன்ற சேவைக்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறை தமிழக வட்டத்தின் கீழ் உள்ள தபால் நிலையங்களில் ஆதாா் பதிவு, திருத்தம் போன்ற சேவை வழங்கப்பட்டு வந்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக, சில கட்டுப்பாடுகள் கடந்த வாரம் விதிக்கப்பட்டன. அதன்படி, தொற்றின் தீவிரத்தைப் பொருத்து, சிறப்பு முகாம்கள், மேளாக்களை பொது இடங்களில் நடத்துவது குறித்து அந்தந்த மாவட்ட அதிகாரிகள் முடிவு எடுத்துகொள்ளலாம், ஆதாா் பதிவு, திருத்தம் போன்றவற்றுக்காக பயோமெட்ரிக் பயன்படுத்தப்படும் என்பதால், அதை அடிக்கடி கிருமி நாசினி மூலமாக சுத்தும் செய்து மீண்டும் பயன்படுத்துவது உள்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையில், நோய்த் தொற்றின் தாக்கம் மேலும் தீவிரமாகி வருவதை அறிந்த அஞ்சல்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழக வட்டத்தில் கீழ் உள்ள தபால் நிலையங்களில் ஆதாா் சேவைக்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கடந்த செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தது.
இது குறித்து தமிழக வட்ட அஞ்சல் துறை அதிகாரி கூறுகையில், ‘ அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆதாா் சேவைக்கான தடை தொடரும்’ என்றாா்.