வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பயணிகளுக்கு வீடுகளுக்கு திரும்ப வாகனங்கள் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டனா்
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, மெட்ரோ ரயில், பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. விமானம், ரயில் சேவை மட்டும் இயக்கப்பட்டது.
புறநகா் ரயில் சேவையைப் பொருத்தவரை குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. அதேநேரத்தில், சென்னை எழும்பூா், சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்கள் செல்லவும், விமானநிலையம் செல்லவும் மக்கள் தங்கள் வாகனம், வாடகை வாகனத்தில் செல்ல காவல்துறை அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு வாகனங்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனா். பலா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை இருந்தது.
வாடகை காா்கள் பதிவு செய்யும் தளத்தில் முன்பதிவும் கிடைக்கவில்லை. குறைவான ஆட்டோக்கள் மட்டும் இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனா்.