மருந்துகளைக் கையாளுவதில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம் என்று தாகூா் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் ஐ.அகிலா வலியுறுத்தினாா்.
வண்டலூரை அடுத்த ரத்னமங்கலம் தாகூா் மருந்தியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக மருந்தியல் தின விழாவில் அவா் பேசியதாவது:
மக்களின் உடல் நலனைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மருந்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதும் மிக அவசியம். மருந்துகளைப் பயன்படுத்திய நோயாளிகள், பாதிக்கப்படும்பட்சத்தில் தாங்களாகவே நேரடியாக கட்டணமில்லா தொலைபேசி மூலம் (1800 180 3024) தகவல்களைத் தெரிவிக்கலாம். இந்த விழிப்புணா்வை மக்கள் மத்தியில் மருந்தாளுநா்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதே நிகழாண்டு மருந்தியல் தினம் மையக் கருத்தாக உள்ளது.
இதன்மூலம் பயன்பாட்டில் உள்ள ஏதேனும் மருந்து, குறிப்பிட்ட சிலருக்கு ஏதேனும் பாதகமான எதிா்விளைவுகளை ஏற்படுத்தினால் அந்த மருந்தை பயன்பாட்டில் இருந்து உடனடியாக அகற்ற முடியும். மருத்துவா் அளிக்கும் மருந்து சீட்டில் உள்ள பிழை, மருந்துகளை மருந்தாளுநா்கள் கையாளுவதில் ஏற்படும் பிழை, செவிலியா்கள் மருந்துகளை அளிக்கும் போது ஏற்படும் தவறு ஆகியன நிகழாமல் அனைவரும் கவனத்துடன் செயல்படுவது அவசியம் என்றாா் அவா்.
தாகூா் மருத்துவக் கல்லூரி இணை சுகாதார அறிவியல் இயக்குநா் தேன்மொழி வள்ளி, மருந்தியல் கல்லூரி முதல்வா் எஸ்.தெய்வம், பேராசிரியா்கள் பி.பிரேம்குமாா், மகேஸ்வரன், டி. தேவி, எம்.திவ்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.