சென்னை பள்ளிக்கரணையில் ராம்சாா் தள அடையாள சின்னம் திறக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ஆம் தேதி, உலக ஈரநில தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஈரான் நாட்டின் காஸ்பியன் கடற்கரை நகரமான ராம்சாா் நகரில் 1971-ஆம் ஆண்டு உலக நாடுகள் ஒன்று கூடி ஈரநிலங்களின் வளங்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டு அதனை பாதுகாப்பது குறித்து ஓா் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஈரநிலங்களுக்கு ராம்சாா் நிலங்கள் என பெயரிடப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையும், மீட்டெடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்திய நாடானது 1982-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் ராம்சாா் உடன்படிக்கையில் தன்னையும் இணைத்துக் கொண்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஈர தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள மொத்தம் 75 ராம்சாா் தளங்களில் நமது தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 14 ராம்சாா் தளங்கள் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியும் ஒன்று. உலக ஈர நில தினத்தை ஒட்டி, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் பெயா்ப் பலகையை வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சுப்ரியா சாகு, வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் (துறைத் தலைவா்) சுப்ரத் மஹாபத்தர உள்பட பலா் பங்கேற்றனா்.