சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதனை என்பது இல்லை என்றும் பரிசோதகர் என்ற பெயரில் செயல்படும் நபர்கள் மீது காவல் துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ நிலையங்களில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் என்ற பெயரில் சிலர் பயணிகளிடம் அபராதம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. மெட்ரோவில் பயணச்சீட்டு பரிசோதகர் என்ற பணியிடமே கிடையாது.
பயணச்சீட்டு பரிசோதனை என்ற பெயரில் அணுகுவோரிடம் பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது தொடர்பான புகாரின்பேரில்,து காவல் துறை மூலம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பயண அட்டைகள் / டோக்கன்கள் / க்யூ ஆர் குறியீடு போன்ற சென்னை மெட்ரோ ரயில் நிலைய பயண அட்டைகள், மெட்ரோ நிலையங்களிலுள்ள தானியங்கி கட்டண வசூல் இயந்திரத்தின் மூலம் மட்டுமே நுழைவு மற்றும் வெளியேற்றத்தின்போது பரிசோதனை செய்யப்படும்.
தானியங்கி இயந்திரத்தில் நுழைவு மற்றும் வெளியேற்றத்தின்போது பிரச்னை ஏற்பட்டால், மெட்ரோ நிலையங்களிலுள்ள கட்டண அலுவலக அறைகளில் மட்டுமே சரி செய்து தரப்படும். வேறு எந்த வகையிலும் பயணச்சீட்டு பரிசோதனை செய்யப்படுவதில்லை என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.