அரசியலுக்கு அப்பாற்பட்டது குடியரசுத் தலைவர் பதவி: பிரதமர் மோடி
“மேற்கு வங்க அரசின் நடவடிக்கைகளால் குடியரசுத் தலைவர் பதவிக்கு அவமதிப்பு” - பிரதமர் மோடி
குடியரசுத் தலைவர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களுக்கானச் சிறப்பு நிகழ்ச்சியொன்றில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(மார்ச் 7) கலந்துகொண்டார். ஆனால், அந்நிகழ்ச்சியானது ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த பிதாநகர் பகுதியிலிருந்து பாக்தோக்ரா விமான நிலையம் அருகேயுள்ள கோஷாய்பூருக்கு மாற்றப்பட்டது.
இந்த தீடீர் மாற்றம் அரசியல் விவாதமாக மாறிவிருக்கிறது. அதற்கான காரணம் என்னவாயின், நிகழ்ச்சி இடமாற்றத்தால் சொற்ப எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அதில் பங்கேற்றதாகவும், இதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணமெனவும் பரவலாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, குடியரசுத் தலைவரின் வருகையின்போது, அவரை வரவேற்க மமதா பானர்ஜியோ அல்லது அவர் சார்பில் எந்தவொரு அமைச்சரோ செல்லவில்லை என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இவையனைத்தையும், நிகழ்ச்சியில் மேடையேறிய குடியரசுத் தலைவர் தமது உரையில் சுட்டிக்காட்டிப் பேசினார்.
இதனைத்தொடர்ந்து, இதற்கு எதிர்வினையாக மமதா பானர்ஜி அளித்துள்ள பதிலளித்தார். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, “திரிணமூல் காங்கிரஸ் அரசு உண்மையில் எல்லைகளை மீறிச் செயல்பட்டுவருகிறது. குடியரசுத் தலைவர் அவமதிக்கப்பட்டதற்கு அவர்களது நிர்வாகமே பொறுப்பாகும்.
இது வெட்கக்கேடானது; பழங்குடியின சமூகங்களின் முன்னேற்றத்தின் மீது நம்பிக்கை பூண்டுள்ள ஒவ்வொருவரும் மனம் நொந்துபோயுள்ளனர்.
பழங்குடியினச் சமூகப் பின்புலத்திலிருந்து வந்துள்ள குடியரசுத் தலைவர் முர்மு வெளிப்படுத்தியிருக்கும் வேதனையானது, இந்திய மக்களின் மனங்களிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குடியரசுத் தலைவர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது அதன் மாண்பு எப்போதுமே மதிக்கப்பட வேண்டும்” என்றார்.