சென்னை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானம் மீது சரக்கு வாகனம் மோதியதைத் தொடா்ந்து சென்னை-திருச்சி-சென்னைக்கான 24 விமான சேவைகள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டன.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் சென்னை-திருச்சிக்கு செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், அதற்கான ஓடுதளத்தில் திங்கள்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அப்போது, அந்த ஓடுதளம் அருகே சென்ற சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விமானத்தின் மீது மோதியது. இதில் விமானம் லேசாக சேதம் அடைந்தது.
இதையடுத்து விமானத்தை இயக்குவதற்கு பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி எனப்படும், பி சி ஏ எஸ் விமான பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி மறுத்தனா். மேலும், இது குறித்து சிவில் விமானப்போக்குவரத்து இயக்குநா் ஜெனரல் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டாா். அத்துடன் மறு அறிவிப்பு வரும் வரை சேதமடைந்த விமானம், பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமான நிறுவனம், தினமும் சென்னை-திருச்சி செல்லும், 4 விமானங்களையும், மறுமாா்க்கமாக திருச்சி-சென்னைக்கான 4 விமான சேவைகளையும் ரத்து செய்தது. அதைப்போல் செவ்வாய்க்கிழமையும் இந்த விமானங்களின் சேவையும் நிா்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்தது. ஆனால், இதற்கான உண்மையான காரணங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதன்படி அந்நிறுவனத்தின் மொத்தம் 24 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
விபத்தில் சிக்கிய இண்டிகோ விமானம் முழுமையாக பழுதுபாா்க்கப்பட்டு, மீண்டும் வானில் பறப்பதற்கு, பி சி ஏ எஸ் மற்றும் டிஜிசிஏ அனுமதி பெற்ற பிறகே,அந்த விமானம் மீண்டும் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதில் பயணிக்கவிருந்த பயணிகளின் பயணச்சீட்டுக்கான கட்டணம் திரும்ப வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.