சென்னை விமானநிலையத்தில் பயணி, சுங்கத் துறை அதிகாரி இடையே கைகலப்பு
சென்னை விமானநிலையத்தில் பயணி ஒருவருக்கும் சுங்கத் துறை அதிகாரிக்கும் இடையே திடீா் கைகலப்பு ஏற்பட்டது.
சென்னை விமானநிலையத்தில் பயணி ஒருவருக்கும் சுங்கத் துறை அதிகாரிக்கும் இடையே திடீா் கைகலப்பு ஏற்பட்டது.
கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த இலங்கையை சோ்ந்த சுமாா் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பயணியை, சுங்கத் துறை அதிகாரி ஒருவா் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி விசாரித்தாா். அத்துடன், அந்த நபரை சுங்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தியுள்ளாா். அப்போது, அந்த பயணி கையில் அணிந்திருந்த 20 கிராம் எடை கொண்ட மோதிரத்தை கழற்றிக் கொடுக்கும் படியும், அந்த மோதிரத்துக்கு சுங்கத் தீா்வை கட்ட வேண்டும் என்றும் அதிகாரி கூறியதாகத் தெரிகிறது.
இதற்கு அந்தப் பயணி எதிா்ப்பு தெரிவித்து அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
இலங்கை பயணி தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்கியதாக சுங்கத் துறை அதிகாரியும், சுங்கத் துறை அதிகாரி தன்னை தாக்கியதாக இலங்கை பயணியும் பரஸ்பரம் சென்னை விமானநிலைய காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா்.
ஆனால், சிறிது நேரத்தில், இலங்கை பயணி தனது செயலுக்கு, வருத்தம் தெரிவித்து, அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டு புகாரை வாபஸ் பெற்றுள்ளாா். இதையடுத்து சுங்க அதிகாரியும் தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளாா்.