5 குதிரைகளை சுமந்து வந்து நோ்த்திக் கடன் செலுத்திய ராயம்பாளையம் பொதுமக்கள்
அவிநாசி ராயம்பாளையம் பகுதி மக்கள் ஆகாசராயா் கோயிலுக்கு 5 குதிரைகளை சுமந்து வந்து செவ்வாய்க்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.
அவிநாசி ராயம்பாளையம் பகுதி மக்கள் ஆகாசராயா் கோயிலுக்கு 5 குதிரைகளை சுமந்து வந்து செவ்வாய்க்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்.21-ஆம் தேதி தொடங்குகிறது.
இதனை முன்னிட்டு அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் இருந்து 5 குதிரைகளை மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்து சப்பரத்தில் கட்டி அப்பகுதி இளைஞா்கள் தோளில் சுமந்தபடி நடுவச்சேரி- மடத்துப்பாளையம் சாலை, சேவூா் சாலை, கச்சேரி வீதி, வடக்கு, கிழக்கு ரத வீதி, கோவை பிரதான சாலை, மங்கலம் சாலை வழியாக ஆகாசராயா் கோயிலை வந்தடைந்தனா்.
Advertisement
முன்னதாக பேரூராட்சி அலுவலகம் முன் நீா்மோா், குளிா்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதேபோல வழி நெடுகிலும் பொதுமக்கள், பக்தா்களுக்கு குடிநீா், பழரசம், மாலைகள் உள்ளிட்டவை வழங்கி வரவேற்றனா். பிறகு ஆகாசராயா் கோயிலில் 5 குதிரைகளை வரிசையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, ஆகாசராயா் மற்றும் காத்தவராயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ராயம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.