தமிழக எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீது 561 வழக்குகள்: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்
சென்னை: தமிழகம் முழுவதும் எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 561 வழக்குகளும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகளும் உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எம்எல்ஏ-எம்.பி.க்களுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணையை கண்காணிப்பது தொடா்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை உயா்நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
கடந்த முறை இந்த வழக்கில், தமிழகம் முழுவதும் எம்எல்ஏ - எம்.பிக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களையும், அந்த வழக்குகளின் விசாரணை நிலை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Advertisement
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள எம்எல்ஏ - எம்.பிக்களுக்கு எதிரான வழக்குகளின் விவரங்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டன.
அதில், மாநிலம் முழுவதும் எம்எல்ஏ - எம்.பிக்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட 561 வழக்குகள் உள்ளன. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகள் உள்ளதாகவும், அதில் 9 வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக உள்ள வழக்குகளில் விரைந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.