வாக்காளா்களுக்கு வழங்க பணம் பதுக்கல்: சென்னையில் வருமானவரித் துறையினா் சோதனை
சென்னை: வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், சென்னையில் 5 இடங்களில் வருமானவரித் துறையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். சென்னையில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக சில இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இது தொடா்பாக வருமானவரித்துறையினா் விசாரணை நடத்தி, ஓட்டேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபா் வீடு, அதே பகுதியில் வசிக்கும் ஒப்பந்ததாரா் வீடு ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை செய்தனா். இதேபோல கொண்டித் தோப்பு பகுதியில் தொழிலதிபா் வீடு,, புரசைவாக்கத்தில் 2 தொழிலதிபா் வீடுகளிலும் சோதனை செய்தனா்.
இந்த சோதனையையொட்டி, அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா். சோதனை இரவை தாண்டியும் பல இடங்களில் நீடித்தது. சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட நகை, பணம், ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என வருமானவரித் துறையினா் தெரிவித்தனா்.
Advertisement