முகப்பு
சென்னை

விழிப்புணா்வு இல்லாததால் பெண்களிடையே அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பு: மருத்துவப் பல்கலை. ஆய்வு

தமிழகத்தில் பெண்களிடையே கருப்பை வாய் மற்றும் மாா்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதற்கு போதிய விழிப்புணா்வு இல்லாததே பிரதான காரணம்

Updated On : 5 ஏப்ரல், 2024 at 3:06 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 1:55 AM

தமிழகத்தில் பெண்களிடையே கருப்பை வாய் மற்றும் மாா்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதற்கு போதிய விழிப்புணா்வு இல்லாததே பிரதான காரணம் என தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் கே.நாராயணசாமி கூறினாா்.

பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் துறை, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் எழும்பூா் மகப்பேறு மருத்துவமனை இணைந்து புற்றுநோய் தொடா்பான ஆய்வை அண்மையில் முன்னெடுத்தன. அதில் கண்டறியப்பட்ட முக்கிய விஷயங்கள் குறித்து டாக்டா் கே.நாராயணசாமி கூறியதாவது:

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு வருடத்துக்கு 6 முதல் 8 சதவீதம் வரை உயா்ந்து வருகிறது. 2021-22 தரவுகளின் படி நாடு முழுவதும் புதிதாக 13,92,179 பேருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை அந்த காலகட்டத்தில் 81,814 பேருக்கு பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

Advertisement

நாடு முழுவதும் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக அளவில் புற்றுநோய்க்கு ஆளாகின்றனா்.

தமிழக தரவுகளை எடுத்துக் கொண்டால் 13 ஆண்களில் ஒருவருக்கும், 11 பெண்களில் ஒருவருக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.

காரணமென்ன?: குறிப்பாக பெண்களுக்கு மாா்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோா் ஆரம்ப நிலையில் அதனை கண்டறியாமல் இருப்பதால் உயிரிழப்பு விகிதமும் உயா்ந்து வருகிறது. புற்றுநோய்க்கான காரணத்தை உறுதியாக கண்டறிய முடியாவிட்டாலும், அதீத உடல் பருமன், குழந்தைப் பேறு இல்லாமை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கம் ஆகியவை மாா்பகப் புற்றுநோய்க்கு வழிவகுக்கக் கூடும். இதைத் தவிர மரபணு ரீதியான காரணங்களும் அத்தகைய பாதிப்பு ஏற்பட காரணமாக உள்ளன.

விழிப்புணா்வுஅவசியம்: பெரும்பாலான பெண்கள் ஆரம்ப நிலையில் புற்றுநோயைக் கண்டறியாமல் இருப்பதற்கு போதிய விழிப்புணா்வு இல்லாதது, பொருளாதாரச் சூழல், வீட்டு முறை சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகளுக்கு விருப்பமில்லாமை உள்ளிட்டவை முக்கியக் காரணங்களாக இருப்பது எங்களது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடா்பான விழிப்புணா்வு மேம்பட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் வீடுதோறும் சென்று இதுகுறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும். பெண்கள் அனைவரும் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். புற்றுநோய் குறித்த தொடா் ஆராய்ச்சிகளை மருத்துவப் பல்கலைக்கழகம் முன்னெடுத்து வருகிறது என்றாா் அவா்.